பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் எவருக்கும், அவர்களின் குடும்ப உறவுகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (12) பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ராஜபக்ஷ குடும்பத்தை விமர்சித்ததுடன், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்.
“திருடக்கூடாது என்று தந்தை முன்கூட்டியே அவர்களிடம் கூறியிருக்க வேண்டும். இப்போது அழுவதற்குப் பதிலாக…”
எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, “தாய் அல்லது பாட்டியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொருந்தும். பொதுமக்களின் பணத்தை திருடிய எவரிடமும் எங்களுக்கு அனுதாபம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெறும் SLPP பேரணியையும் ஜனாதிபதி விமர்சித்ததுடன், ஊழல் குற்றச்சாட்டுகளில் தேடப்படும் சிலர் அந்தப் பேரணியில் இருப்பதாகக் கூறினார்.
மேலும், “CID அங்கு சென்றால் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், அனுராதபுரத்தில் SLPP ஏற்பாடு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அகல உடல் விமான கொள்வனவு விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





