121,000 புதிய நியமனங்கள் அரச சேவையில் இணைக்கப்படும்; 23,000 ஆசிரியர்களும் உள்ளடக்கம்
பாடசாலை புத்தகங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நொச்சியாகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்களைக் குறைக்கும் பரந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கான முன்மொழிவு எதிர்வரும் வரவு–செலவுத் திட்டத்தில் விரிவாக முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவுகளை குறைப்பதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 121,000 புதிய நியமனங்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அவற்றில் சுமார் 23,000 ஆசிரியர் நியமனங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் கல்வி உள்ளிட்ட நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான துறைகளில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





