தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.
கடந்த 11ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் வந்து வீட்டின் கதவைத் தட்டிய பின்னர், கதவு திறக்கப்பட்டபோது வீட்டுக்குள் கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதான இளைய சகோதரர் துமிந்த கிஹான் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் அவர்களது 55 வயதான தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, வேறொரு வீட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் வீடு தவறாக அடையாளம் காணப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





