இணையம் மூலம் தனிப்பட்ட அல்லது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி மிரட்டி பணம் அல்லது வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் ‘Sextortion’ குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்கள், செய்தியிடல் செயலிகள், டேட்டிங் தளங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் ஊடாக இந்த வகையான குற்றங்கள் ஆரம்பிக்கக்கூடும் என SLCERT தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் முதலில் நட்பாக அல்லது காதல் தொடர்பை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பெறுவதுடன், பின்னர் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை வெளியிடுவதாக அச்சுறுத்தி பாதிக்கப்பட்டவர்களிடம் பணம், மேலதிக புகைப்படங்கள் அல்லது வேறு கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SLCERT அறிவுறுத்தல்கள்:
இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் அவதானமாக இருக்கவும்.
இணையத்தில் அறிமுகமாகும் நபர்களை உடனடியாக நம்ப வேண்டாம்.
புகைப்படம் ஒன்றை மட்டும் வைத்து ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாது.
சந்தேகத்திற்கிடமான உரையாடல்களை உடனடியாக நிறுத்தவும்.
அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வதற்கு முன் நன்கு சிந்திக்கவும்.
மிரட்டல் ஏற்பட்டால் ஆதாரங்களை முதலில் பாதுகாத்து, பின்னர் குறித்த கணக்கைத் தடுத்து (Block) முறைப்பாடு செய்யவும்.
உடனடியாக நம்பகமான நபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உதவி பெறவும்.
மேலும், AI மூலம் உருவாக்கப்படும் போலியான ‘Deepfake’ புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் பயன்படுத்தி சிலர் மிரட்டலில் ஈடுபடக்கூடும் என SLCERT எச்சரித்துள்ளது.
“பாதிக்கப்பட்டவர் குற்றவாளி அல்ல; Sextortion ஒரு குற்றச்செயல்” என வலியுறுத்தியுள்ள SLCERT, விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அச்சுறுத்தல் ஏற்பட்டவுடன் தாமதமின்றி முறைப்பாடு செய்வது முக்கியம் என தெரிவித்துள்ளது.





