ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு – 2026 தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவராவார். இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தகவல்களிலும் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராகப் பதிவாகியுள்ளார்.
கடந்த காலத்தில் கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்டிருந்த ஹிஸ்புல்லாஹ், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 31ஆவது பேராளர் மாநாட்டிலும் பிரதித் தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மேலும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளராக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் நெருங்கிய நண்பரான காத்தான்குடியினைச் சேர்ந்த ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) அக்கட்சியின் பிரதி பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அதியுயர் பீட உறுப்பினராக இதுவரை ஒருபோதும் செயற்படாத மும்தாஸ் மௌலவி, அதிவிசேட நிலைமையின் கீழ் பிரதிப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளராக எஹியாக் கான் செயற்பட்டார். இவர் கட்சியினை விட்டு பிரிந்து சென்றமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மும்தாஸ் மௌலவி நியமிக்கப்பட்டுள்ளார்.





