யேமனிலிருந்து சவூதி அரேபியாவின் யன்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, கிரேக்க இராணுவத்தினர் இயக்கிய Patriot வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில், யன்பு நகர மக்களுக்கு சவூதி சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அவசர எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
கிரேக்க பாதுகாப்பு வட்டாரங்களின் தகவலின்படி, இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளும் யேமனிலிருந்து ஏவப்பட்டு, யன்புவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டிருந்தன.
சவூதி அரேபியாவின் எரிசக்தி உட்கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Patriot வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கிரேக்கம் 2021ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் தனது இராணுவத்தினருடன் இணைந்து இயக்கி வருகிறது.
இந்த அமைப்பை கிரேக்க இராணுவத்தினர் பயன்படுத்தி ஏவுகணைகளை இடைமறித்த இரண்டாவது சம்பவம் இதுவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





